Kids Learning: Kids Learning Tamil

Kids Learning Tamil


3-ம் வகுப்பு தமிழ் பருவம் - II


 I. உண்மையே உயர்வு கதைப்பாடல்

உப்பு மூட்டை சுமந்து தான் 
கழுதை ஒன்று வந்தது 
ஓடை கடக்கும் நேரத்தில் 
நீரில் மூட்டை விழுந்தது 

நீரில் உப்பு கரைந்ததும் 
எடை குறைந்து போனது 
நனைந்த மூட்டை அதனையே
கழுதை முதுகில் ஏற்றியே

உரிமையாளர் கழுதையை 
வேகமாக ஓட்டினார்
உப்பு எடை குறைந்ததால்
கழுதை மகிந்து சென்றது

நாள்தோறும் உப்பு மூட்டையை
கழுதை மீது ஏற்றினார் 
ஓடை‌க் கரையில் வந்ததும் 
அசைத்துக் கீழே தள்ளிடும்

எடையும் குறைந்து போய்விடும் 
கழுதை மகிழ்ச்சி கொண்டிடும்
புரிந்துகொண்ட உரிமையாளர்
பாடம் புகட்ட எண்ணினார் 

அடுத்த நாளும் வந்தது
பஞ்சு மூட்டை ஒன்றையே
கழுதை மீது ஏற்றினார்
ஓடைக்குள்ளே வந்ததும் 

அசைத்துக் கீழே தள்ளியது
எடை குறையும் என்றுதான் 
உப்பைப் போல நினைத்தது
நீரில் நனைந்த பஞ்சுகளால்

எடையும் அதிகம் ஆனது
உரிமையாளர் ‌மூட்டையை
கழுதை முதுகில் ஏற்றினார்
கனத்த மூட்டை அழுத்தவே

கழுதை வருந்தி அழுதது
உண்மையான உழைப்புத் தான்
வாழ்வில் உயர்வைத் தந்திடும் 
ஏய்த்துப் பிழைக்க எண்ணினால்
என்றுமில்லை வெற்றியே!



https://youtu.be/g5FMl17XfZ4



II. ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு


ஒரு காட்டில் மரங்களுக்கும் விலங்குகளுக்கும் விவாதம் நடந்தது.  

நாங்க தான் எல்லாருக்கும் அதிகமாகப் பயன் படுகிறோம்.  ஆகவே, உங்களை விட நாங்கள் தான் உயர்ந்தவர்கள்.

எங்களால் தான் நீங்கள் பாதுகாப்பாக வளர்கிறீர்கள்! ஆகவே, நாங்கள் தான் உயர்ந்தவர்கள்.  

யார் உயர்ந்தவர் என ஒரு போட்டி வைத்துப் பார்த்துவிடுவோமா?

ஓ! நாங்கள் தயார்.  என்ன போட்டி? சொல்லுங்கள்.

ஒரு மாதத்திற்கு நீங்கள் எல்லாம் இந்தக் காட்டை விட்டு வெளியே சென்று வசிக்கவேண்டும்.

சரி, இப்போட்டிக்கு நாங்கள் ஒத்துக் கொள்கிறோம்.

எல்லா விலங்குகளும் பாலைவனம் நோக்கிச் சென்றன.

மரங்கள் இல்லாமல் குளிர்ச்சி இல்லையே, ஒரே வெப்பமாக இருக்கிறதே.

எனக்கு எந்தக் கிழங்கும் காயும் கிடைக்கவில்லையே.

திடீரென ஒருநாள் பாலை வனத்தில் வேட்டைக்காரர்கள் வந்து விலங்குகளை வேட்டையாடினர்.

ஐய்யோ! நாங்கள் எப்படி தப்பிப்பது?

வேட்டைக்காரர்கள் வேட்டையாடிய விலங்குகளைத் தூக்கிச் சென்றனர்.

மீதி விலங்குகள் ஒன்று கூடின.  நாம் பாதுகாப்பான காட்டை விட்டு வந்தது தவறு.  மீண்டும் காட்டுக்குச் செல்வோம் என்று முடிவெடுத்தன.

விலங்குகள் இல்லாத நேரத்தில் காட்டுக்குள் புகுந்த மனிதர்கள் மரங்களை வெட்டினர்.

வெட்டிய மரங்களை எடுத்துச் சென்றனர்.

வெட்டப்பட்ட மரங்களைப் பார்த்து, திரும்பி வந்த விலங்குகள் அதிர்ச்சி அடைந்தன.

மரங்களே, உங்களுக்கு என்னவாயிற்று?  

நீங்கள் இல்லாத நேரத்தில் சில மரங்களை மனிதர்கள் வெட்டி எடுத்துச் சென்றுவிட்டனர்.

எங்கே சில நண்பர்களைக் காணோம்.

பாலைவனத்தில் இருந்தபோது எங்களுள் சிலரை வேட்டையாடிச் சென்றுவிட்டனர்.

எங்களுக்கு உணவு, தண்ணீர், பாதுகாப்பு எல்லாம் காட்டித்தான் கிடைக்கிறது.

ஆமாம் நண்பர்களே நீங்கள் இருந்தால்தான் எங்களுக்கு பாதுகாப்பு.  

இங்கு யாரும் உயர்ந்தவர் தாழ்ந்தவர் இல்லை.  அனைவரும் சமமானவர்கள்!  எல்லாரும் ஒற்றுமையாக வாழ்வோம்.



https://youtu.be/OiBWMb0nGSw



III. கல்வி கண் போன்றது 

விரியூர் கிராமத்திலுள்ள ஊராட்சிமன்ற அலுவலகத்தில் அன்று கிராமசபைக் கூட்டம்.  வீட்டிற்கு ஒருவர் கூட்டத்தில் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என்று தண்டோரா போட்டு அறிவிக்கப்பட்டிருந்தது.  அறிவிப்பைக் கேட்ட பொன்வண்ணன, தம் கடையைப் பூட்டிவிட்டுக் கூட்டத்திற்குச் சென்றார்.


ஊராட்சிமன்த் தலைவர் கூட்டத்திற்கு வந்திருந்தவர்களை வரவேற்றுப் பேசினார். சிறுதொழில் தொடங்கு வதற்கான உதவித்தொகை வழங்கும் அரசின் திட்டம் குறித்துப் பேசினார்.  இத்திட்டத்தின் கீழ் யார் யாருக்கெல்லாம் உதவித் தொகை வந்திருக்கிறதோ அவர்களின் பெயர்களைப் படித்தார்.


பொன்வண்ணன் தம்முடைய பெயர் வருகிறதா என ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்.


ஆனால், கடைசி வரை அவர் பெயர் வரவேயில்லை.



https://youtu.be/Zzdw7iFFVC4




பொன்வண்ணன், தலைவரிடம் சென்றார்.  "ஐயா! எனக்கு ஏன் உதவித்தொகை இல்லை? நானும் பண வசதியில்லாமல் மிகவும் துன்பப்படுகிறேனே....." என்று கேட்டார்.  


"யாருக்கெல்லாம் பண உதவி தேவையோ, அவர்களுக்கான கூட்டம் பற்றி உங்களுக்கு அஞ்சல் மூலம் தெரிவித்து இருந்தோமே! நீங்கள் ஏன் கலந்து கொள்ளவில்லை?" என்றார் தலைவர்.


"ஆமாம் போன வாரம் அஞ்சல்காரர் கொடுத்தார்.  படிக்கத் தெரியாததால் அப்படியே வைத்துவிட்டேன்".


"என்னப்பா! உனக்குத்தான் படிக்கத் தெரியல, ஆனா, உம்பையன்தான் பள்ளியிலே படிக்கிறானே, அது எப்படி தெரியாமல் போகும்?


பொன்வண்ணன் சற்றுக் குற்ற உணர்வோடு தலை குனிந்தபடி கூறினார், " ஐயா! நான் மிதிவண்டி பழுதுபார்க்கும் கடை வைத்திருக்கிறேன்.  



https://youtu.be/6rer1KRJ2wY





எனக்கு உதவி செய்வதற்காக, அவனை அடிக்கடி பள்ளிக்கு விடுப்பு எடுக்கச் சொல்வேன்.  சில சமயங்களில் தொடர்ந்து பள்ளிக்குச் செல்ல இயலாத சூழ்நிலை ஏற்பட்டுவிடும்.  அதனால்தானோ என்னவோ அவனுக்குச் சரியாக எழுதவும் படிக்கவும் தெரியாமலே போய்விட்டது.  அவனுடைய ஆசிரியரும் இதைப்பற்றி என்னிடம் அடிக்கடி சொல்லி வருத்தப்படுவார்.  பள்ளிக்குத் தொடர்ந்து அனுப்புமாறு அறிவுரையும் கூறுவார். நான்தான் தப்பு செய்துவிட்டேன்.  என் மகனை இப்படிப் படிக்கத் தெரியாதவனாக ஆக்கி விட்டேன்." என்று வருத்தத்துடன் கூறினார் பொன்வண்ணன்.


"உங்கள் அறியாமையால் இப்போது என்னவாயிற்று பார்த்தீர்களா? அரசின் உதவித் தொகையை உங்களால் பெற முடியாமல் போய்விட்டதே.  கல்வி அறிவு இருந்தால் தான் நாள்தோறும் நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்ச்சிகளையும் அறிவியல் மாற்றங்களையும் அறிந்து கொள்ள முடியும்.  நம்மையும் மேம்படுத்திக்கொள்ள முடியும்.  கல்வி, தொழிலுக்கு வழிகாட்டுகிறது.  வாழ்க்கையை நெறிப்படுத்த உதவுகிறது.  இப்போதாவது புரிந்து கொண்டீர்களா? 


ஐயா!  இப்ப நான் நன்கு புரிந்து கொண்டேன். நான்தான் கல்வி கற்காமல் இருந்து விட்டேன். என் மகனாவது  நன்கு படித்து வாழ்வில் முன்னேறட்டும். இனி நான் என் மகனை வேலைக்காகப் பள்ளியைவிட்டு நிறுத்த மாட்டேன். இப்போதே என் மகனை அழைத்துச் சென்று தலைமை ஆசிரியரிடம் மீண்டும் பள்ளியில் சேர்த்துக் கொள்ளுமாறு நான் வேண்டிக் கொள்வேன்.


புரிந்து கொண்டால் சரிதான். உங்களுக்கு ஏற்பட்ட இந்த அனுபவத்தால  நீங்க மட்டும் தெரிந்துகொண்டால் போதாது. நம் கிராமத்தினர் அனைவருமே அறியாமை நீங்கி, கல்வி குறித்த விழிப்புணர்வு பெறவேண்டும்.


கல்வியின் தேவையை எடுத்துக் கூறிய  ஊராட்சி மன்றத் தலைவருக்கு, நன்றி கூறிவிட்டு அங்கிருந்து சென்றார் பொன்வண்ணன்.



https://youtu.be/6rer1KRJ2wY




No comments:

Post a Comment