2-ம் வகுப்பு தமிழ் பருவம்-II
I. அழகுத் தோட்டம்
தோட்டத்திலே வண்ணப் பூவும்
பூத்துக் குலுங்குது
பார்த்ததுமே சின்னத் தேனீ
பாட்டுப் பாடுது
பசுமையான புல்லைத் தேடி
மாடும் மேயுது
பக்கத்திலே கன்றுக்குட்டி
துள்ளி ஓடுது
உயரமான மரத்தினிலே
பழமும் தொங்குவது
பச்சைக்கிளி பறந்து வந்து
கொத்தப் பார்க்குது
அழகுத் தோட்டம் பார்க்கும்போதே
நன்மை இழுக்குது
ஆட்டம் ஆடி பாட்டுப்பாட
ஆசை பொங்குவது
II. நண்பரைக் கண்டுபிடி!
நம்முடன் விளையாட. . . புது நண்பர் ஒருவர் வரப்போகிறார்.
புது நண்பராக. . . யார் அவர்?
முயல் : நீங்களே கண்டுபிடியுங்கள். நான்கு கால்கள் கொண்டவர்.
வாத்து : மாடுதானே?
முயல் : இல்லை.
கூரான கொம்புகள் இருக்காது. பெரிய உருவம் கொண்டவர்.
குரங்கு : ஓ. . . நான் சொல்லட்டுமா. . . யானை தானே?
முயல் : ஊகூம். நீண்ட தும்பிக்கை இருக்காது. வேகமாக ஓடுவார்.
கழுகு : எனக்குத் தெரியும். சிறுத்தை தானே?
முயல் : இல்லை.
கருப்புப் புள்ளிகள் இருக்காது. நீண்ட கால்கள் இருக்கும்.
நரி : வரிக்குதிரையா?
முயல் : இல்லை.
கருப்பு வெள்ளை வரிகள் இருக்காது. நீண்ட கழுத்தைக் கொண்டவர்.
கிளி : ஐ! தெரிந்துவிட்டது. ஒட்டகம் தானே?
முயல் : இல்லையே!
உருண்டையான திமில் இருக்காது. உடலில் கட்டங்கள் இருக்கும்.
அனைவரும் ஓ! நாங்கள் கண்டுபிடித்து விட்டோம்.
புது நண்பர் வந்தார். விளையாட்டு தொடங்கியது.
புது நண்பர் யாரென்று உங்களுக்குத் தெரியும்தானே?
III. குட்டிக்குரங்கின் ஒருநாள்...
குட்டிக் குரங்கு நானே!
குதித்து வந்திடுவேனே!
உயரமான தென்னை மரத்தின் உச்சியிலிருந்து சறுக்கிடுவேன்.
உருண்டையான நாவல் பழத்தைத் தரையில் போட்டு உருட்டிடுவேன்.
சுவையான வாழைப்பழத்தைச் சுவைத்து நானும் தின்றிடுவேன்.
நீளமான விழுதைப் பிடித்து நன்றாய் ஊஞ்சல் ஆடிடுவேன்.
வேரில் பழுத்த பெரிய பலா வேண்டும் அளவு தின்றிடுவேன்.
குளத்தின் குளிர்ந்த நீரிலே குதித்து விளையாடிடுவேன்.
வளைந்த கிளையில் வாலைச் சுருட்டித் தலைகீழாகத் தொங்கிடுவேன்.
அம்மா என்னைத் தேடும் முன்னே விரைந்து ஓடிச் சேர்ந்திடுவேன்.
IV. வாழ்த்தலாம் வாங்க
பர்வீன் படம் வரைந்துக்கொண்டு இருந்தாள். அப்போது அஜ்மல் வந்தான்.
"ஐ! மயில். அழகாக உள்ளது. அக்கா" என்றான் அஜ்மல்.
"வா! வா! உனக்குப் பிடிக்குமே. . . வண்ணம் தீட்டுகிறாயா?" என்றால் பர்வீன்.
"ஓ!" ஆர்வத்துடன் அமர்ந்தான் அஜ்மல்.
"இறகின் நடுவில் எழுத இடம் விட்டு வண்ணம் தீட்டு அஜ்மல்" என்றாள் பர்வீன்.
"ஏன் அக்கா?" என்று கேட்டான் அஜ்மல்.
"அந்த இடங்களில் ஆங்கில மாதங்களின் பெயர்களை எழுதப் போகிறேன்" என்றாள் பர்வீன்.
"இது நாள்காட்டியா அக்கா?" என்று கேட்டான் அஜ்மல்.
"இல்லை. இது நினைவூட்டி" என்றாள் பர்வீன்.
"நினைவூட்டியா. . . புரியும்படி சொல்லேன் அக்கா" சிணுங்கினாள் அஜ்மல்.
"இதை ஆசிரியரிடம் தருவேன். அந்தந்த மாதத்தில் பிறந்தவர்களின் பெயர்களை எழுதுவோம்" என்றாள் பர்வீன்.
"எதற்காக அக்கா?"என்றான் அஜ்மல்.
"மறக்காமல் வாழ்த்து சொல்லத்தான் இந்தப் பிறந்தநாள் நினைவூட்டி" என்றாள் பர்வீன்.
"நன்றாக இருக்கிறதே. எங்கள் வகுப்புக்கும் ஒன்று செய்யலாமா அக்கா?" என்றான் அஜ்மல்.
"ஓ. செய்யலாமே! இனி எல்லாரின் பிறந்தநாளிலும் மறக்காமல் வாழ்த்தலாம்"
V. ஆத்திசூடி
ஒரு குளத்தில் நிறைய மீன்கள் இருந்தன. மீன் குஞ்சு ஒன்று அதன் அம்மாவுடன் இரை தேடச் சென்றது.
அப்போது பெரிய புழு ஒன்றைக் கண்டது. "ஆகா! நல்ல உணவு கிடைத்துவிட்டது. அம்மா! நான் அதைப் பிடிக்கட்டுமா?" என்று அம்மாவைக் கேட்டது மீன் குஞ்சு.
"சற்றுப் பொறு செல்லமே! இதுபோன்ற புழுவை நான் இந்தக் குளத்தில் இதுவரை கண்டதில்லை. அருகே சென்று பார்ப்போம் வா" என்று கூறியது அம்மா மீன்.
புழுவின் அருகில் சென்று பார்த்தன. "அந்தப் புழு எதிலோ மாட்டிக்கொண்டிருக்கிறது. அம்மா" என்றது மீன் குஞ்சு.
"ஆமாம். இதுதான் தூண்டில். இதைக் கவனிக்காமல் பிடித்திருந்தால் நாம் இதில் மாட்டியிருப்போம்" என்றது அம்மா மீன்.
"இனி உங்களைப் போலவே நானும் கவனமாய் இருப்பேன், அம்மா" என்றது மீன் குஞ்சு. புரிந்துகொண்ட மீன் குஞ்சுக்கு அம்மாவிடம் இருந்து முத்தம் ஒன்று பரிசாகக் கிடைத்தது.
ஆத்திசூடி தொடர்ச்சி
ரகு மாமா ஒரு செய்தி சொன்னார் அக்கா.
என்ன சொன்னார்?
நம் இருவரையும் வேலைக்குச் கூப்பிட்டார்.
வேலைக்கா?
சாப்பாடும் திண்பண்டங்களும் கொடுப்பார்களா ம்.
ஓ. . .! அப்படியா?
ஆமாம் நம்மால் செய்யக்கூடிய எளிமையான வேலைதான் என்று கூறினார்.
பணமும் தருவார்களாம். அவருக்கு என்னக்கா பதில் சொல்வது?
இப்பொழுது படிக்கிற வயது அல்லவா?
உங்கள் பிள்ளைகளைப் போலவே நாங்களும் படிக்கிறோம் என்று மாமாவிடம் சொல்.
சரியாகச் சொன்னாய் அக்கா.
VI. ஆத்திசூடி தொடர்ச்சி
போகலாமா?
அம்மா நேரம் ஆகிவிட்டது. சாப்பாடு வேண்டாம்.
வகைவகையான கற்களை எடுத்து வந்தாயா? ஆசிரியர் சொல்லியிருந்தாரே?
காலையில் செய்ய நினைத்தேன். ஆனால் நேரமில்லை.
இதோ பார். நான் சேகரித்து விட்டேன்.
இரவே முடித்துவிட்டாயா?
காலையில் தான் சேகரித்தேன்.
காலையில் எப்படி? பள்ளிக்குக் கிளம்பவே நேரம் போதவில்லையே!
நான் விடியற்காலையில் எழுந்து விடுவேன். அதனால் நிறைய நேரம் கிடைத்தது. காலை நேரம் எவ்வளவு அழகு தெரியுமா?
ஓ! இனி நானும் விடியற்காலையில் எழ முயற்சி செய்கிறேன்.
VII. ஆத்திசூடி தொடர்ச்சி
அவர்கள் நடனம் ஆடும்போது எனக்கும் ஆடத் தோன்றியது.
எவ்வளவு வேகமாகச் சிலம்பம் சுற்றினார்கள்!
நடிப்பு போன்றே தெரியவில்லை.
அருமையான நாடகம்.
அந்த அக்கா பாடிய பாடல் இன்னும் என் காதில் கேட்டுக்கொண்டே இருக்கிறது.
நமக்குப் பிடித்தவற்றை நாமும் கற்றுக்கொள்வோமா.
என்னை மிகவும் கவர்ந்தது அந்தத் திரையில் வரைந்திருந்த ஓவியங்கள் தான்.
No comments:
Post a Comment